கொடைக்கானல்:
கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான தாண்டிக்குடி, பெரியூர், மங்களம்கொம்பு, கே.சி.பட்டி, பண்ணைக்காடு ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அவரை, பீன்ஸ், சவ்சவ் உள்ளிட்ட பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் போதிய அளவு மழை பெய்ததால் தாண்டிக்குடி பகுதியில் அவரை, பீன்ஸ் விளைச்சல் அதிகரித்துள்ளது.
மேலும் தற்போது அவை அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தாண்டிக்குடியில் அவரை, பீன்ஸ் சீசன் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே கடந்த வாரம் ஒரு கிலோ அவரை மற்றும் பீன்ஸ் ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் தற்போது ஒரு கிலோ அவரை ரூ.10-க்கும், பீன்ஸ் ரூ.7-க்கும், சவ்சவ் ரூ.6-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தாண்டிக்குடி மலைப்பகுதியில் ஏராளமான விவசாயிகள் அவரை, பீன்ஸ், சவ்சவ் போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
தற்போது விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கால் காய்கறிகளை கொண்டு சென்று விற்பனை செய்வதில் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது.
இதனால் காய்கறிகளை வாங்க வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் அவற்றின் விலை சரிந்துள்ளது என்றனர்.