மாவட்ட செய்திகள்

கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி நாகையில், பா.ம..க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கை மனுவும் வழங்கினர்.

நாகப்பட்டினம்,

நாகை நகராட்சி அலுவலகம் பா.ம.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் வேதமுகுந்தன் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி அமைப்பாளர் பாண்டித்துரை, மாவட்ட தலைவர் கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பா.ம.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர் சமுதாயத்தினருக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை 2 தொகுப்புகளாக பிரித்து வழங்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கோரிக்கை மனு

இதை தொடர்ந்து கோரிக்கை மனுக்களை நகராட்சி ஆணையர் ஏகராஜிடம் வழங்கினர். இந்த போராட்டம் காரணமாக நகராட்சி அலுவலகம் முன்பு 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம்

வன்னியருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பா.ம.க.சார்பில் வேதாரண்யம் நகராட்சி ஆணையரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாநில நிர்வாக குழு உறுப்பினர் புலவர் சின்னதுரை, வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் பாக்கம் சக்திவேல் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் ராச சிம்மன், நகரசெயலாளர் அருள் முருகன், நகரத்தலைவர் சுப்பிரமணியன், வன்னியர் சங்க மாநில துணை தலைவர் வீராச்சாமி, அசோகன், மா.ப.சாமி மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க. பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு மனு அளித்தனர்.

SCROLL FOR NEXT