புதுக்கோட்டை,
புதுக்கோட்டை அருகே அடப்பன்வயல் 3-வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜன்(வயது 61). இவர் மாவட்ட வருவாய் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். திருச்சி, விழுப்புரம், தர்மபுரி உள்ளிட்ட இடங்களில் பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில் இவரது வீட்டில் இருந்த வைரம் மற்றும் தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மொத்தம் ரூ.4 லட்சம் மதிப்பில் நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
நகைகளை வீட்டில் வேலை செய்து வந்த திருவப்பூரை சேர்ந்த ராஜலட்சுமி கொஞ்சம், கொஞ்சமாக திருடிச்சென்றது தெரிந்தது. இது குறித்து திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் கோவிந்தராஜன் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவிந்தராஜன் வீட்டில் வேலைசெய்து வந்த ராஜலட்சுமியை தேடி வருகின்றனர்.