உசிலம்பட்டி,
மதுரையை அடுத்த சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் அதிகாரிபட்டி ஊராட்சிக்கு உட்பட்டது ஏ.வாக்குளம். இந்த ஊரிலிருந்து பி.செட்டியபட்டி என்ற ஊருக்கு இணைப்புச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டு பல வருடங்களாகிவிட்டன. சாலை போடப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை பராமத்து உள்ளிட்ட எவ்வித பராமரிப்பும் இன்றி உள்ளது.
இதனால் சாலையில் பல இடங்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. சாலையின் சில இடங்களில் பள்ளமாகவும், மண் மேடாகவும் மாறியநிலையில் பயன்படுத்த முடியாத நிலையில் காட்சியளிக்கிறது. இந்த சாலையில் வாகனங்கள் செல்வது சிரமமாக உள்ளதால், குறிப்பிட்ட நேரத்தில் போக வேண்டிய இடங்களுக்கு செல்ல பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த சாலையில் செல்லும் போது குண்டும், குழியுமான இடங்களில் விழுந்து காயமடைந்து செல்கின்றனர். இரவு நேரங்களில் மண்மேடாகி உள்ள இடங்களில் செல்லும் இருசக்கர வாகனங்கள் பெரும் விபத்தில் சிக்கி கொள்கின்றன. குறிப்பாக ஏ.வாக்குளம் அருகில் ஆளை விழுங்கும் அளவிற்கு ஏற்பட்டுள்ள பெரிய பள்ளத்தில் பல வாகனங்கள் சிக்கிக்கொள்கின்றன.
அப்போது வாகன ஓட்டிகளும், பயணிகளும் பலத்த காயமடைந்து வருகின்றனர். எனவே பழுதடைந்து போக்குவரத்திற்கு லயக்கற்ற நிலையில் உள்ள ஏ.வாக்குளம்-பி.செட்டியபட்டி இணைப்புச்சாலையை புதுபிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அந்த பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.