மயிலாடுதுறை,
தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து கடைகளை அடைப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று மயிலாடுதுறையில் பட்டமங்கலத்தெரு, மகாதானத்தெரு, காந்திஜி சாலை, கூறைநாடு, பூக்கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து சில்லறை மற்றும் மொத்த விற்பனை மருந்து கடைகள் அடைக்கப் பட்டன. பொதுமக்களுக்கு ஆரோக்கியமற்றதாக விளங்கும் ஆன்-லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்கக் கூடாது. டாக்டர்களின் பரிந்துரையின்பேரில் மட்டுமே மருந்துகள் விற்பனை செய்ய வேண்டும். ஆன்-லைனில் மருந்து விற்பனையை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். டாக்டர்கள் மட்டுமே பரிந்துரைத்து வழங்க வேண்டிய மருந்துகளுக்கு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய முற்படும்போது போலி டாக்டர்கள் அந்த பரிந்துரை சீட்டை உருவாக்கும் ஆபத்தை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மருந்து கடைகள் அடைக்கப்பட்டதால் அவசர தேவைக்கு பொதுமக்கள் மருந்துகள் வாங்க முடியாமல் பாதிக்கப்பட்டனர்.