குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வேப்பூர் கிராமத்தில் உள்ள நாராயன பெருமாள் கோவிலில் கோபுர விமான சுதை, சிற்ப பஞ்சவர்ண வேலைகள் உள்ளிட்ட திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி யாகசாலை அமைக்கப்பட்டு முதல் கால யாக பூஜை மங்கள இசையுடன் நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. அதனை தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, அங்குரார்ப்பணம், ரக் ஷாபந்தனம், வாஸ்து சாந்தி, கும்ப ஸ்தாபனம், பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது.
நேற்று காலை 2-வது கால யாக சாலை பூஜை, மகா தீபாராதனை உள்பட பூஜைகள் நடந்தன. பின்னர் யாகசாலையில் இருந்து வேத விற்பன்னர்கள் கலசங்களை சுமந்து, மேளதாளங்களுடன் கோவிலை வலம் வந்தனர். இதைத்தொடர்ந்து நாராயண பெருமாள் கோவில் விமான கலசங்களின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.