மாவட்ட செய்திகள்

பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பென்னாகரம்,

மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நலசங்கத்தின் சார்பில் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்க பகுதிகுழு தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கருவூரான், இணை செயலாளர் இடும்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி ஜீவானந்தம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ரவி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும். இந்த திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேர வேலையை நிர்ணயித்து முழு ஊதியம் அளிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர். இதன் காரணமாக போராட்டம் முடிவுக்கு வந்தது.

SCROLL FOR NEXT