தேனி:
வெளிநாட்டில் வேலை
பெரியகுளம் வடகரை சீதாராம்நகரை சேர்ந்தவர் அபுதாகிர். இவருடைய மனைவி நாஜிநிஷா. இவர்களுடைய மகன் ஆஷிப்ராஜா (வயது 20). இவர் டிப்ளமோ படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டு இருந்தார்.
இந்நிலையில், தேவாரம் மேட்டுப்பட்டியை சேர்ந்த ராஜாகண்ணன், பண்ணைப்புரத்தை சேர்ந்த கார்த்திகேயன் ஆகிய இருவரும் தேனி பழைய பஸ் நிலையம் அருகில் ஒரு கட்டிடத்தில், வெளிநாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பும் அலுவலகம் நடத்தி வந்தனர். அவர்கள் வெளிநாடுகளுக்கு நல்ல ஊதியத்தில் ஆட்களை அனுப்பி வைப்பதாக ஆஷிப்ராஜாவை தொடர்பு கொண்டு ஆசைவார்த்தைகள் கூறினர்.
ரூ.7 லட்சம் மோசடி
இதை நம்பிய ஆஷிப்ராஜா ரூ.3 லட்சம், அவருடைய நண்பர்கள் பசீர்ஷஹானி ரூ.1 லட்சம், யாஷிப்ரகுமான் ரூ.1 லட்சம், காளிராஜ் ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.7 லட்சத்தை அவர்கள் ராஜாகண்ணன், கார்த்திகேயன் ஆகியோரிடம் கொடுத்தனர்.
ஆனால், அவர்கள் வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுக்காமல் இருந்தனர். கொடுத்த பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதுகுறித்து ஆஷிப்ராஜாவின் தாய் நாஜிநிஷா தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் கொடுத்தார்.
அதுகுறித்து நடவடிக்கை எடுக்க தேனி போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் இந்த மோசடி குறித்து ராஜாகண்ணன், கார்த்திகேயன் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.