மடத்துக்குளம்,
தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 4 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் 3-வது கட்டமாக கணியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில் வழங்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் 61-வது இடத்தில் தமிழ்நாடு அரசு ஆண் கணியூர் என்ற பெயர் காணப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கட்சியினர் கூறுகையில் கூட்டுறவு சங்க தேர்தல்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நிர்வாகிகள் பல்வேறு முறைகேடுகள் காரணமாக அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்படும் நிலையே உள்ளது. இதில் தமிழ்நாடு அரசு என்ற பெயரில் உறுப்பினர் பெயர் சேர்க்கப்பட்டிருப்பது மேலும் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் திட்டமாக உள்ளது என்று கூறினர்.
இதுகுறித்து கூட்டுறவு கடன் சங்க அதிகாரிகள் கூறுகையில் நலிவுற்ற கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு சார்பில் நிதி வழங்கப்படும். அவ்வாறு நிதியை பெற்ற வங்கிகள் நிதி வழங்கியவர் என்ற வகையில் தமிழ்நாடு அரசை உறுப்பினராக சேர்த்துக்கொள்ளும் நடைமுறை உள்ளது. தமிழ்நாடு அரசின் பெயரில் வேறு யாரும் வாக்களிக்க முடியாது தமிழக அரசிடம் வாங்கிய நிலுவையை திருப்பி செலுத்தி விட்டால் பட்டியலிருந்து பெயரை நீக்கிக்கொள்ளலாம் என்று கூறினார்.