கோத்தகிரி,
கோத்தகிரி கடைவீதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஈளாடா தடுப்பணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
ஆனால் கோடைகாலத்தில் தடுப்பணை வறண்டு விடுவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது.இதை தீர்க்கும் வகையில் ரூ.10 கோடியே 60 லட்சம் செலவில் அளக்கரை கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்த திட்டத்தின் கீழ் கடைவீதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
ஆனால் 3 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் அங்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து கடைவீதி பொதுமக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் பெரும்பாலானவர்கள் தங்களது வீட்டுக்கு தனி குடிநீர் இணைப்பு பெற்று உள்ளனர். மேலும் அதற்கான வரியை தவறாமல் நகராட்சிக்கு செலுத்தி வருகிறோம். ஆனால் 3 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இது போதுமானதாக இல்லை.
இதனால் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வாரத்துக்கு 5 நாட்கள் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.