திருக்கனூர்,
திருக்கனூர் அருகே செட்டிப்பட்டு பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இதில் மாரியம்மன் கோவில் வீதி உள்பட சில பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.இதுதொடர்பாக கொம்யூன் பஞ்சாயத்துக்கு புகார்தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் செட்டிப்பட்டு கிராம மக்கள் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி நேற்று திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் பிரச்சினைக்கு அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.