பூந்தமல்லி,
சென்னை போரூரில் தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் நல சங்கத்தலைவர் கோபாலநாயுடு, பொதுச்செயலாளர் சண்முகப்பா ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 41 சுங்கச்சாவடிகள் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகள் மூலம் தேவையான பணம் வசூல் செய்த பிறகும் மத்திய அரசு தொடர்ந்து கட்டணம் வசூலிப்பதை நிறுத்தவில்லை. இதுவரை சுங்க கட்டணமாக ரூ.22 ஆயிரம் கோடியை வசூல் செய்து உள்ளனர்.
இதனால் லாரி, பஸ் வாகன உரிமையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. சுங்க கட்டணத்தை ஆண்டுக்கு ஒரு முறை கொடுப்பதாக கூறினோம். அதற்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இது தொடர்ந்தால் விரைவில் கடுமையான போராட்டம் நடத்தப்படும் என மத்திய அரசை எச்சரிக்கிறோம். புதுச்சேரியில் விரைவில் கூட்டம் கூட்டி சுங்க கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்து முடிவு எடுப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.