திருப்பூர்,
திருப்பூர் வடக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் கொங்குநகர் பகுதி 24-வது வார்டுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீதி, வீதியாக திறந்த வேனில் சென்று அ.தி.மு.க. அரசின் சாதனை திட்டங்களை விளக்கிக் கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட மக்களின் பல்லாண்டு கோரிக்கையான அவினாசி அத்திக்கடவு திட்டத்தை தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி உள்ளார். இதன் பயனாக வரும் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் அதிகபடியாக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள்.
தமிழக அரசு விவசாயிகளின் நலனில் அக்கறையோடு செயல்பட்டு வருவதுடன், விவசாயிகளின் உற்ற தோழனாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளங்கி வருகிறார். எனவே அவர் மீண்டும் தமிழகத்தின் முதல்-அமைச்சராக வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. திருப்பூர் வடக்கு தொகுதி ஏராளமான புதிய திட்டங்களை பெற்றுத்தர வரும் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.