மாவட்ட செய்திகள்

புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம்,

சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை பல்கலைக்கழகத்துக்கு வந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோவில் அருகே ஒன்று திரண்டனர்.

பின்னர் அவர்கள் புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும், 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற கொள்கை, மும்மொழி கொள்கையை கைவிட வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

இந்த போராட்டம் மதியம் வரை நடந்தது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் யாரும் வராததால், மாணவர்கள் தாங்களாகவே போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பல்கலைக்கழக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT