சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியை அடுத்த கீழக்கோட்டை கிராமத்தில் நேற்று முன்தினம் மாலையில் தடை உத்தரவை மீறி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்படுவதாக மதகுபட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கலையரசு மற்றும் போலீஸ் ஏட்டு கனகராஜ் ஆகியோர் விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் அங்கு கூடியிருந்த 30 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
இதற்கிடையில் அங்கு கட்டப்பட்டிருந்த மாடு கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடி வந்தது. இதில் எதிர்பாராதவிதமாக அந்த மாடு போலீஸ் ஏட்டு கனகராஜை (வயது 37) முட்டியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து கனகராஜை மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சீராளன், மதகுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் தடையை மீறி வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தியதாக 30 பேர் மீது வழக்கு பதிவு செய்து ராமன் (45), ரவி (24), பிரபு (20), பாலாஜி (19), விஜயகுமார் (20), ராஜ்குமார் (24), சிரஞ்சீவி (28) மற்றும் திவாகர் (21) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருகின்றனர்.