கடலூர்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 25-ந் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வைரஸ் பரவுவதை தடுக்க மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் பான்பரி மார்க்கெட், உழவர் சந்தை ஆகியவை பஸ் போக்குவரத்து இல்லாததால் கடலூர் பஸ் நிலையத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.
இதற்கிடையில் பஸ் போக்குவரத்து நேற்று முன்தினம் தொடங்கியதால், பஸ் நிலையத்தில் இயங்கிய காய்கறி மார்க்கெட்டை இம்பீரியல் சாலையில் உள்ள கோ ஆப்-டெக்சுக்கு எதிரே இடமாற்றம் செய்ய நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி பஸ் நிலையத்தில் இயங்கி வந்த பெரும்பாலான கடைகள் நேற்று கோ ஆப்-டெக்சுக்கு எதிரே இருந்த காலி மனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. பின்னர் அங்குள்ள மரத்தடியில் வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்தனர். இங்கு வந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்களை வாங்கிச்சென்றனர்.
ஒரு சில வியாபாரிகள் மட்டும் தங்களது கடைகளை, மஞ்சக்குப்பம் அண்ணா மைதானத்திற்கு இடமாற்றம் செய்தனர். இதற்கிடையே கலெக்டர் அன்புசெல்வன், நேற்று காலை கோ ஆப்-டெக்சுக்கு எதிரே இடமாற்றம் செய்யப்பட்ட காய்கறி கடைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.