பழனி:
பழனியில் ஊரடங்கையொட்டி காந்தி மார்க்கெட், உழவர்சந்தையில் அதிகாலை முதலே பொருட்கள் வாங்க மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
அங்கு சமூக இடைவெளி இன்றி மக்கள் கூடியதால் கொரோனா பரவும் சூழல் நிலவியது. எனவே அங்குள்ள காய்கறி கடைகளை தற்காலிகமாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி பழனி உழவர்சந்தை, காந்தி மார்க்கெட்டில் செயல்படும் காய்கறி கடைகளை தற்காலிகமாக இடமாற்றம் செய்ய நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
இதைத்தொடர்ந்து காந்தி மார்க்கெட், உழவர்சந்தை காய்கறி கடைகள் மூடப்பட்டது.
தற்காலிகமாக இன்று (புதன்கிழமை) முதல் பழனி நகராட்சி ஆண்கள் பள்ளி மைதானம், பஸ்நிலையத்தில் காய்கறி கடைகள் செயல்பட உள்ளது.
இதையடுத்து கடைகள் அமைக்கப்படும் பகுதியில் முன்னேற்பாடு பணிகளாக கிருமி நாசினி தெளித்தல், சமூக இடைவெளிக்கான குறியீடு வரைதல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக தாசில்தார் வடிவேல்முருகன், நகராட்சி மேலாளர் குணாளன், சுகாதார ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் அதிகாரிகள் பஸ்நிலையம், பள்ளி மைதானத்தை பார்வையிட்டு நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது வியாபாரிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து வணிகர் சங்க பிரதிநிதிகளிடம் அதிகாரிகள் விளக்கி கூறினர்.