சென்னை,
பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த 16-ந்தேதியன்று வெளியிடப்பட்டது. பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்றிதழ் ஆகியவை நேற்று முதல் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட்டது. அரசு விதித்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஒரு மணி நேரத்துக்கு தலா 20 மாணவர்கள் வீதம் பள்ளிக்கு அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்றிதழ் ஆகியவற்றை ஆசிரியர்கள் வழங்கினர்.
முககவசம் அணியாதவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. மேலும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. கைகளில் கிருமிநாசினி திரவமும் தெளிக்கப்பட்டது.
மறுகூட்டலுக்கு விண்ணப்பம் செய்ய, மதிப்பெண் சான்றிதழ் பெற வந்த மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர் தனித்தனியாக சமூக இடைவெளி உடன் அமர வைக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் செய்திருந்தனர். மறுகூட்டலுக்கு விண்ணப்பம் செய்வதற்கும், மதிப்பெண் பட்டியல் வாங்குவதற்கும் வருகிற 30-ந்தேதி கடைசி நாள் ஆகும்.