ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் புல்வமா பகுதியில் இன்று பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சண்டையில் இரண்டு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த என்கவுண்டர் நடைபெற்ற இடத்திற்கு அருகில் பாதுகாப்பு படையினர் மீது உள்ளூர் மக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
பாதுகாப்பு படையினர் பொதுமக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் இதில் ஆறு பேர் காயமடைந்ததாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினார். காயம் அடைந்தவர்களில் குல்சார் அகமது மிர் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டினார்.
ஆனால், பாதுகாப்பு படையினர் தரப்பில் இந்த குற்றச்சாட்டை மறுத்தனர். பயங்கரவாதிகளுடனான சண்டையின் போது குறுக்கே வந்ததால் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் பாதுகாப்பு படையினரை கல் வீசி தாக்கினர். இந்த சம்பவத்தால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.