தேசிய செய்திகள்

முல்லைப்பெரியாறு அணையில் நாளை மத்திய கண்காணிப்புக் குழு ஆய்வு

பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் நாளை அதிகாரிகள் ஆய்வு செய்யவுள்ளனர்.

இடுக்கி, 

ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக் காலங்களில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் மற்றும் அணையின் உறுதித்தன்மை, அணையில் செய்ய வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்த ஆய்வை மத்திய கண்காணிப்பு தலைமை மற்றும் துணைக் குழுவினர் நடத்துவார்கள்.

அதன்படி நாளை(புதன்கிழமை) மத்திய நீர்வள ஆணையத் தலைவர் சதீஷ்குமார் தலைமையில் தமிழக அரசு சார்பில் செயற்பொறியாளர் ஜே.சாம்இர்வின், உதவி கோட்ட பொறியாளர் டி.குமார், கேரள அரசு சார்பில் கட்டப்பனை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அனில்குமார், உதவி பொறியாளர் அருள்ராஜ் ஆகியோர் ஆய்வு நடத்துகின்றனர்.

இந்த ஆய்வில் பிரதான அணை, பேபி அணை, சுரங்கப்பாதை, நீர் கசியும் அளவு, மதகுகளின் இயக்கம், நிலநடுக்கக் கருவிகள் ஆகியவற்றை ஆய்வு செய்கின்றனர். ஆய்விற்கு பின்னர் கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி ஆய்வு அறிக்கைகளை மத்திய தலைமைக் குழுவுக்கு அனுப்பவுள்ளனர். 

SCROLL FOR NEXT