திருவனந்தபுரம்,
இந்தியாவிலேயே கேரளாவில் தான் முதன்முதலாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது கொரோனாவை விரட்டியடிப்பதில் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், கேரளாவில் மொத்தம் 485 கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 359 பேர் குணமடைந்து மீண்டுள்ளனர். இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்தது.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் இன்று புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கேரளத்தில் 3 சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் உட்பட 10 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 495 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கேரளாவில் கொரோனா பாதித்து 123 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.