புதுடெல்லி,
மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா, உச்சநீதிமன்ற நீதிபதியாக நேரடியாக நியமிக்கப்படும் முதல் பெண் வழக்கறிஞர் ஆவார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய் உள்ளிட்டோர் அடங்கிய குழு உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் காலி இடங்களுக்கான தேர்வை நிகழ்த்தியது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலை மத்திய சட்ட அமைச்சகத்துக்கு இந்தக் குழு அனுப்பி வைத்தது.
இதில் உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் மற்றும் மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்திருந்தது. அதன்படி உச்சநீதிமன்றத்தின் புதிய பெண் நீதிபதியாக இந்து மல்ஹோத்ராவின் தேர்வுக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் இந்து மல்ஹோத்ரா சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 61 வயதான மல்ஹோத்ரா, 2007-ம் ஆண்டு முதல் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞராக செயல்பட்டு வருகிறார். இவர் வழக்கறிஞராக இருந்து உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்காமல் நேரடியாக சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகும் முதல் பெண் என்ற பெருமைக்கு உரியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெள்ளிகிழமை உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்து மல்ஹோத்ரா பதவி ஏற்பார் என எதிர்பார்கப்படுகிறது.