மும்பை,
பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடியில் சிக்கிய வைர வியாபாரி நிரவ் மோடிக்கு எதிராக சிபிஐ, அமலாக்கப்பிரிவு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.
இந்த ஊழலில் பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றும் கூறப்படுகிறது. வங்கியின் 10 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே நிரவ் மோடி மீது பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா பரபரப்பு புகார் கூறிஉள்ளார். நிரவ் மோடியின் நகைக்கடைகளுக்கு சர்வதேச அளவில் விளம்பரத் தூதராக இருந்த பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு விளம்பரத்தில் நடத்த பணத்தை தராமல் நிரவ் மோடி ஏமாற்றிவிட்டார். இது தொடர்பாக அவர் மீது பிரியங்கா சோப்ரா வழக்கு தொடர்ந்து உள்ளார் என தகவல் வெளியாகியது.
இதற்கிடையே பிரியங்கா சோப்ரா வழக்கு தொடரவில்லை என அவருடைய செய்தித் தொடர்பாளர் கூறிஉள்ளார். பிரியங்கா சோப்ரா நிரவ் மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளார் என யூகங்கள் வெளியாகி உள்ளது. இதில் உண்மை கிடையாது. இருப்பினும், நிரவ் மோடியின் கடைக்கு விளம்பரத் தூதராக இருக்கும் பிரியங்கா சோப்ரா தன்னுடைய ஒப்பந்தத்தை ரத்து செய்வது தொடர்பாக சட்ட ஆலோசனைகளை பெற்று வருகிறார், என அவருடைய செய்தித் தொடர்பாளர் கூறிஉள்ளார்.