ஈரோடு,
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை தொழிலில் ஈடுபட்டு வந்தவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி குடிநீர் வினியோகஸ்தர்கள் நேற்று ஊர்வலமாக சென்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அதன்படி ஈரோடு சம்பத்நகரில் இருந்து தொடங்கிய ஊர்வலம் கொங்கு கலையரங்கம் பகுதியில் நிறைவடைந்தது. அதன்பின்னர் அவர்கள் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
நாங்கள் கடந்த 20 ஆண்டுகளாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனையாளர்களாக உள்ளோம். விற்பனை முகவர்களாக சுமார் 3 ஆயிரம் பேர் உள்ளனர். மேலும், டிரைவர்கள், தொழிலாளர்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் வேலை செய்து வருகிறார்கள். இந்தநிலையில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் மூடப்பட்டதால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் மூலமாக ஈரோடு மாநகராட்சியில் 75 சதவீத குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த தடை காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள்.
எனவே எங்களுடைய வாழ்வாதாரத்தை மீட்டு தரக்கோரியும், பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.