தமிழக செய்திகள்

10 சதவீத இடஒதுக்கீடு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. கேவியட் மனு தாக்கல்

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவு எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, சென்னை ஐகோர்ட்டு கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி தி.மு.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் கடந்த ஆகஸ்டு 25-ந் தேதி அளித்த தீர்ப்பில், மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது அனுமதிக்கத்தக்கது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்பது சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் இல்லாமல் பின்பற்றுவது அனுமதிக்கத்தக்கதல்ல எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தால் தங்களது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என கோரி தி.மு.க. சார்பில் வக்கீல் ஆர்.நெடுமாறன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.