சென்னை
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
இதையடுத்து இந்த வழக்கு 3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 3-வது நீதிபதியாக, ஐகோர்ட்டு மூத்த நீதிபதி எம்.சத்தியநாராயணனை, சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது.
இதன்படி, நேற்று முன்தினம் முதல் இந்த வழக்கை நீதிபதி எம்.சத்தியநாராயணன் விசாரித்து வருகிறார். முதல் நாள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் வாதிட்டார். இரண்டாவது நாளான நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வக்கீல் மோகன் பராசரன் ஆஜராகி வாதிட்டார். இன்று 3 வது நாளாக சபாநாயகர் தரப்பு வக்கீல் வாதாடினார்.
முதல்வரை எதிர்ப்பது என்பது அரசை எதிர்ப்பது போன்றதுதான். ஆட்சி கலைக்கும் அதிகாரம் உள்ள ஆளுநரை சந்தித்தது ஆட்சியை கலைக்கும் முயற்சிதான். ஆட்சியை கலைக்கும் முயற்சி அல்ல என 18 எம்.எல்.ஏக்கள் கூறுவதை ஏற்க முடியாது என்று வாதிடப்பட்டது.