தமிழக செய்திகள்

2 காதல் ஜோடிகள் தஞ்சம்

கன்னங்கறிச்சி போலீஸ் நிலையத்தில் 2 காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்தனர்.

கன்னங்குறிச்சி:-

ஓமலூரை அடுத்த சங்கீதப்பட்டியை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 24). லாரி டிரைவர். ஓமலூர் புளியம்பட்டியைச் சேர்ந்த லோகேஸ்வரி (20). இவர் பி.காம். படித்துள்ளார். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு 2 பேரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்கவே இருவரும் வீட்டைவிட்டு வெளியேறினர். பின்னர் அவர்கள் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள ஆறுபடையப்பன் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர், தொடர்ந்து போலீசார் 2 பேரின் பெற்றோர்களையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதே போல செட்டிசாவடி பகுதியை சேர்ந்தவர் அக்ஷயதரணி (19). இவர் கடந்த 2 நாளுக்கு முன்பு காணாமல் போனார். இது குறித்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் செட்டிசாவடி பகுதியை சேர்ந்த திலீப்குமார் (26) என்பவரை திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு கன்னங்குறிச்சி போலீசில் தஞ்சம் அடைந்தார். தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் அவர்களின் பெற்றோர்களை அழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். 2 காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்ததால், அவர்களது உறவினர்கள் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் திரண்டனர். இதனால் கொட்டும் மழையிலும் அங்கு பரபரப்பு நிலவியது.