திருச்செந்தூர்,
தமிழகத்தில் கொரோனா 2-ம் கட்ட அலை வேகமாக பரவியதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 26-ந் தேதி முதல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் யாரும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தினசரி பூஜைகள் மட்டும் நடந்தது.
இந்நிலையில் ஊரடங்கு தளர்வால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 70 நாட்களுக்கு பிறகு இன்று(திங்கட்கிழமை) முதல் பக்தர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இன்று முதல் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அபிஷேக நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.
தேங்காய் உடைத்து வழிபட அனுமதி வழங்கப்படவில்லை. காது குத்துவதற்கு அனுமதியில்லை. கடல் மற்றும் நாழிகிணற்றில் புனித நீராடவும் அனுமதியில்லை. முடிக்காணிக்கை செலுத்த அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.