தர்மபுரி, தர்மபுரி சோகத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 40). இவரது மனைவி அபிராமி (28). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது அபிராமி 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் இரவு தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக சென்றார். அங்கு அபிராமிக்கு ஊசி போடப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் அபிராமி வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவரை உறவினர்களுக்கு தெரியாமல் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு அபிராமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இரவு 10 மணி அளவில் அபிராமி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அபிராமியின் உறவினர்கள் நேற்று காலை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். பின்னர் அவருக்கு தவறான சிகிச்சை அளித்த தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை அபிராமியின் உடலை வாங்கமாட்டோம் எனக்கூறியும் ஆஸ்பத்திரி முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். தர்மபுரி டவுன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு, அபிராமியின் உடலை வாங்கி சென்றனர்.