சென்னை,
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை கோபாலபுரம் இல்லத்திலேயே அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அவருக்கு திடீரென்று ரத்த அழுத்த பிரச்சினை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் கருணாநிதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். காவேரி ஆஸ்பத்திரியின் 4வது மாடியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில், 8 டாக்டர்கள் அடங்கிய குழுவினர் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் டாக்டர்களின் 24 மணி நேர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து தெரிந்துகொள்வதற்காக காவேரி மருத்துவமனை பகுதியில் மழையையும் பொருட்படுத்தாமல் திமுக தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள். பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் வந்துள்ளனர். தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்த நிலையில் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவேரி மருத்துவமனையின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது, சிகிச்சைக்குப்பின் உடல்நிலை சீராக உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.