சென்னை
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீர் ஆதாரங்களை புனரமைக்கவும், அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்கவும் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்திட வார்டு வாரியாக ஒரு குழு வீதம் 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை இக்குழுக்களால் 1 லட்சத்து 42 ஆயிரத்து 396 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளனவா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் 77 ஆயிரத்து 975 கட்டிடங்களில் ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் நல்ல நிலையில் உள்ளன. 23 ஆயிரத்து 146 கட்டிடங்களில் உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளில் சிறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவேண்டிய நிலையிலும், 41 ஆயிரத்து 275 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்காமலும் உள்ளது.
இந்த கட்டிட உரிமையாளர்களுக்கு தங்கள் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உடனடியாக அமைக்கவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பயன்பாடற்று உள்ள 144 சமுதாய கிணறுகள் கண்டறியப்பட்டு, மறுபயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற மாநகராட்சி ஆலோசனை கூட்டத்தில் ஆணையர் பிரகாஷ் கூறியதாவது:-
மழை நீர் சேகரிப்பு கட்டமைக்கப்பட்டு உள்ளதால் நிலத்தடி நீர் உயர்ந்து உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் 4 அடி உயர்ந்து உள்ளது. சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை இதுவரை அமைக்காத 69,490 பேருக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. 38,507 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை சீரமைக்க அதன் உரிமையாளர்களுக்கு ஒரு வாரம் கெடு விதித்து உள்ளது.