தமிழக செய்திகள்

3 மாதம் பொருட்கள் வாங்கவில்லை என்றாலும் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படாது: காமராஜ் தகவல்

நியாயவிலைக் கடைகளில் 3 மாதம் பொருட்கள் வாங்கவில்லை என்றாலும் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படாது பேரவையில் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். #RationCard #TNAssembly

சென்னை,

மானிய விலையில் வழங்கப்படும் உணவுப் பொருள்களை வாங்க வேண்டிய அவசியமில்லாதவர்களைக் கண்டறிந்து அவர்களது குடும்ப அட்டைகளை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தொடர்ந்து மூன்று மாதம் பயனாளிகள் ரேஷனில் பொருள் வாங்காவிட்டால் குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் இந்த தகவலை தெரிவித்து இருந்தார்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு, மக்கள் மத்தியில் அச்சத்தை கிளப்பியிருந்த நிலையில், ரேஷன் அட்டைகளை மூன்று மாதங்கள் பயன்படுத்தாவிட்டாலும் அவை ரத்து செய்யப்படமாட்டாது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கூறியது அறிவுரை தான் எனவும் கொள்கை முடிவு இல்லை எனவும் அமைச்சர் காமராஜ் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.