இஸ்லமபாத்,
ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்தபோது இந்தியாவுக்கு ஒருநாள் முன்னதாக பாகிஸ்தானுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. அதன்படி இன்று அந்நாட்டில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் உள்ள அனைத்து மாகாண தலைநகரங்கள், அரசு அலுவலகங்களில் அந்நாட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. நாட்டின் தலைநகரில் 31 குண்டுகள் முழங்கவும், மாகாண தலைநகரங்களில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்கவும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தில் உள்ள ஜின்னா அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் அந்நாட்டு ஜனாதிபதி, மம்னூன் ஹூசைன் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தானின் தற்காலிக பிரதமர் நசிருல் மல்க், ராணுவ முப்படை தளபதிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
எல்லையில்,பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இந்திய வீரர்களுடன் இனிப்புகள் பரிமாறிக்கொண்டனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தான் ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், பாகிஸ்தான் நிதி நெருக்கடி உள்பட அனைத்து சிக்கல்களிலும் இருந்து மீண்டு வரும் என நம்புவதாக தெரிவித்தார்.