சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு அழுத்தம் தர அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கு அன்புமணி கடிதம்

மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு அழுத்தம் தர அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கு அன்புமணி கடிதம்
Published on

சென்னை,

சாதிவாரி கணக்கெடுப்புக்கான செயலியில் சாதிகள் பட்டியலை இணைத்து அதிலிருந்து சாதியை தேர்ந்தெடுத்து நிரப்பும் முறையை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த ஓபிசி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

புதிய அத்தியாயம்

இது தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அஞ்சல் வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அவற்றின் விவரம்:

அன்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு, வணக்கம்!

இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் இன்னும் சில வாரங்களில் புதிய அத்தியாயம் பிறக்கப் போகிறது. ஆம்.... நாம் அனைவரும் பல பத்தாண்டுகளாக போராடி வந்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டமாக மக்கள்தொகை எண்ணிக்கையுடன், சாதியையும் பதிவு செய்யும் பணி வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கவுள்ளது.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு

இந்தப் பணி நாம் அனைவரும் எதிர்பார்த்தவாறு பயனுள்ள வகையில் இருப்பதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக சமூகநீதியில் அக்கறை கொண்ட கட்சியின் தலைவர் என்ற முறையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

இந்தியாவில் 2021ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2026-27ஆம் ஆண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதை தாங்கள் அறிவீர்கள். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டமான வீட்டுப்பட்டியல் தயாரிப்பு பணி தமிழ்நாடு உள்ளிட்ட அண்மையில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற சில மாநிலங்களைத் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.

செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல்

அடுத்தக்கட்டமாக, மக்களை எண்ணும் பணிகள் மலைப்பிரதேசங்களில் உள்ள மாநிலங்களில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதலும், மற்ற மாநிலங்களில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி முதலும் நடைபெறவுள்ளன. இந்த பணியின் போது, சாதி என்ற கேள்விக்கான பதிலை குறிப்பிடும் பகுதியை காலியாக விட்டு விடுவதென்றும், அந்த இடத்தில் மக்கள் குறிப்பிடும் சாதியின் பெயரை அப்படியே பதிவு செய்வதென்றும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் இந்தியத் தலைமைப் பதிவாளர் முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

பல மடங்கு அதிக சாதிகள்

இந்த முறையில் மக்களின் சாதி விவரம் சேகரிக்கப்பட்டால், நிறைய சிக்கல்கள் ஏற்படும். நாடு முழுவதும் ஒவ்வொரு சாதியிலும் பல உட்பிரிவுகள் உள்ளன. பெரும்பான்மையான மக்கள் சாதியின் பெயரைக் கடந்து உள்பிரிவுகளால் தங்களை அழைத்துக் கொள்வார்கள். ஆனால், அந்த உட்பிரிவுகளின் பெயர்கள் அரசால் பயன்படுத்தப்படும் சாதிகளின் பட்டியலில் இடம் பெற்றிருக்காது. இத்தகைய சூழலில், மக்கள் தெரிவிக்கும் சாதியின் பெயரை அப்படியே நிரப்பி, அது சாதியின் பெயராக இல்லாமல், உட்பிரிவின் பெயராக இருந்தால், அரசின் பட்டியலில் உள்ள சாதிகளின் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிக சாதிகள் இருப்பதாக கணக்கில் காட்டப்படும். இது சரி செய்ய முடியாத குழப்பத்தை உண்டாக்கி, இந்தக் கணக்கெடுப்பின் தரவுகளை பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்கிவிடும்.

46.70 லட்சம் சாதிகள்

2011-ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சார்பில் சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசால் நடத்தப்பட்டது. அதற்கான வினாக்கள் பட்டியலில் இதே போல் தான் சாதி என்ற வினாவுக்கு எதிரில் காலியிடம் விடப்பட்டு, மக்கள் தெரிவிக்கும் சாதியின் பெயரை அதில் குறிப்பிடும் முறை பின்பற்றப்பட்டது. அதன் விளைவு அந்தக் கணக்கெடுப்பில் நாடு முழுவதும் 46 லட்சத்து 70 ஆயிரம் சாதிகள் இருப்பதாக தெரியவந்தது.

இந்தியாவில் 1931ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில் 4,147 சாதிகள் மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில், 2011 கணக்கெடுப்பில் 46.70 லட்சம் சாதிகள் இருப்பதாகக் கூறப்பட்டது விமர்சனங்களுக்கு உள்ளானது. அதனால், அந்தக் கணக்கெடுப்பு தரவுகள் சமூகநீதிக்காக பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டு விட்டன.

இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு என்ற நமது கனவு எளிதில் நனவாகிவிடவில்லை. 1931-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் தான் கடைசியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தட் பட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர், சோஷலிசத் தலைவர் இராம் மனோகர் லோகியா, பிகார் முன்னாள் முதலமைச்சர் பாரத் ரத்னா கர்ப்பூரி தாக்கூர், பி.பி.மண்டல் உள்ளிட்ட தலைவர்கள் குரல் கொடுத்தனர்.

சுமார் நூறு ஆண்டுகளாக

1980-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாசு அய்யா, பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கான்ஷிராம், வட இந்தியப் பெரியார் என்றழைக்கப்பட்ட ராம் அவதேஷ்சிங், பெரியாரின் பெருந்தொண்டர் வே. ஆனைமுத்து, ஜனதாதள தலைவர்கள் முலாயம்சிங் யாதவ், சரத் யாதவ், லாலு பிரசாத் யாதவ், நிதிஷ்குமார், ராம்விலாஸ் பாஸ்வான், தேசியவாத காங்கிரஸ் நிறுவனர் சரத்பவார், அண்மைக் காலங்களில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தனர். 2004-09 காலத்தில் நான் மத்திய அமைச்சராக இருந்த போது, 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தக் கோரி நம்மில் பலர் உட்பட 150க்கும் மேற்பட்ட ஓபிசி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துகளைப் பெற்று 24.10.2008ஆம் நாள் அன்றைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் மனு அளித்தது நம்மில் பலருக்கு நினைவிருக்கலாம்.

இப்படியாக கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் பயனாகவே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு சாத்தியமானது. சுமார் நூறு ஆண்டுகளாக இந்தக் கோரிக்கையை ஆட்சியாளர்கள் ஏற்காத நிலையில் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தான் ஏற்றுக்கொண்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆணையிட்டிருக்கிறார்.

இந்தியாவின் தலைசிறந்த சமூகநீதித் தலைவர்கள் உள்ளிட்ட 3 தலைமுறை தலைவர்கள் தொடர்ந்து போராடியதன் பயனாகவே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு சாத்தியமானது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது கடைபிடிக்கப்படும் தவறான நடைமுறையால் நமது அனைத்து உழைப்பும் வீணாகிப் போவதை நாம் அனுமதிக்கக் கூடாது. அது சமூகநீதிக்கு நாம் செய்யும் துரோகமாகிவிடும்.

துல்லியமான விவரங்கள்

இந்த சிக்கலுக்கான தீர்வு மிகவும் எளிதானது. இந்தியாவில் என்னென்ன சாதிகள் உள்ளன? என்பது குறித்த பட்டியல் மத்திய அரசிடமும், மாநில அரசுகளிடமும் உள்ளன. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தேசிய அளவில் மத்திய அரசால் நடத்தப்படும் நிலையில், அந்தப் பட்டியலை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான செயலியின் மென்பொருளில் இணைத்து, அந்தப் பட்டியலில் இருந்து மக்கள் தங்கள் சாதியை தேர்வு செய்யும் முறையை பின்பற்றுவது தான் சரியான தீர்வாகும்.

கடந்த 2023-ஆம் ஆண்டு பீகார் மாநிலத்திலும், 2024-ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்திலும் நடத்தப்பட்ட சாதிவாரி சர்வேயில், அரசின் பட்டியலில் உள்ள சாதிகள் வரிசைப்படுத்தப்பட்டு, அதை மக்கள் தேர்ந்தெடுத்து நிரப்பும் முறை கடைபிடிக்கப்பட்டது. அதன் பயனாக பீகார் மாநில சாதிவாரி சர்வேயில் துல்லியமான விவரங்கள் கிடைத்தன. அதனால் அதே முறையை இந்த கணக்கெடுப்பிலும் பின்பற்றலாம்.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிகளை பதிவு செய்யும் பணிகள் இன்னும் இரு வாரங்களில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அது சமூகநீதிக்கு வலிமை சேர்க்கும் வகையில் முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டியது நமது கடமை ஆகும்.

மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்

அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில் மக்களை எண்ணும் பணியின் போது மத்திய அரசின் சாதிகள் பட்டியலைக் காட்டி, அதிலிருந்து அவர்களின் சாதி மற்றும் எண்ணை பதிவு செய்யும் முறை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நாம் அனைவரும் அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த முறையும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்கள் துல்லியமாக அமையாவிட்டால், இனி ஒரு முறை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதோ, அவற்றில் முக்கியமான தரவுகள் கிடைப்பதை உறுதி செய்வதோ சாத்தியமில்லை.

எனவே, இப்போது நமக்கு கிடைத்துள்ள வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது சாதிகளை துல்லியமாக பதிவு செய்யும் முறையை பின்பற்றும்படி நாம் தனிப்பட்ட முறையிலும், நமது கட்சித் தலைமையின் சார்பிலும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்; இதை மிகவும் அவசர, அவசியமான பணியாகக் கருதி மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com