தேனி:
தேனி மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கூடலூர், சின்னமனூர், கம்பம், போடி உள்ளிட்ட நகரங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. வாகன போக்குவரத்து இல்லாததால் சாலைகளும் வெறிச்சோடின. பஸ் நிலையங்கள் பயணிகள் இன்றி காணப்பட்டது.
இதேபோல் காய்கறி, மளிகை கடைகள், இறைச்சி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. ஓட்டல், உணவு கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அங்கு பார்சலில் மட்டும் உணவு வழங்கப்பட்டது.
தமிழக-கேரள எல்லைகளான குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவில் இருந்து வந்தவர்களை திருப்பி அனுப்பினர். மேலும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ஆயிரம் போலீசார் ஈடுபட்டனர்.
முழு ஊரடங்கை மீறி அவசியமின்றி சுற்றித்திரிந்த நபர்களுக்கு போலீசார் அபராதம் விதித்ததுடன், எச்சரித்து அனுப்பினர்.