திருப்பூர்,
ஆடை தயாரிப்புக்கு பெயர் பெற்றது திருப்பூர். இங்கு பின்னலாடை தயாரிப்பு பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்த பின்னலாடைகளுக்கு சாயம், பிரிண்டிங், தையல், அயர்னிங், பேக்கிங் என ஏராளமான ஜாப் ஒர்க் நிறுவனங்களும் திருப்பூரில் செயல்பட்டு வருகின்றன.
இந்த ஜாப் ஒர்க் நிறுவனங்களிலும் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதற்கிடையே திருப்பூரில் உள்ள ஜாப் ஒர்க் நிறுவனங்கள் தற்போது கட்டணங்களை உயர்த்தி வருகின்றன. தற்போது உள்ள சூழலில் கட்டண உயர்வை ஒத்திவைக்க வேண்டும் என தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தொழில்துறையினர் கூறியதாவது:-
சாயம், பிரிண்டிங் என்பது உள்பட ஜாப் ஒர்க் நிறுவனங்கள் அனைத்தும் தற்போது கட்டணங்களை உயர்த்தி விட்டன. ஏற்கனவே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குள் பல்வேறு சிரமங்களை சந்தித்தோம். கடந்த ஒரு மாதமாக தான் ஆர்டர்களை பெற்று நிதி நிலையை சீராக்கலாம் என்ற நிலைக்கு வந்தோம். ஆனால் அதற்குள் ஜாப் ஒர்க் கட்டணங்கள் உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுஒருபுறம் இருக்க நூல் விலை உயர்வும் கவலையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நஷ்டத்தை சந்திக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். எனவே ஜாப் ஒர்க் நிறுவனங்கள் கட்டண உயர்வை ஒத்திவைக்க வேண்டும். ஓரளவிற்கு பின்னலாடை தொழில் இயல்பு நிலைக்கு திரும்பியதும், கட்டண உயர்வை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.