திண்டுக்கல்,
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பில் குழந்தைகள் மருத்துவ பிரிவு, கர்ப்பிணிகளுக்கான அறுவை சிகிச்சை பிரிவு, கண்பரிசோதனை பிரிவு ஆய்வகம் ஆகியவை அடங்கிய 3 புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்களின் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர், குழந்தைகள் பரிசோதனை பிரிவில் உள்ள இயன்முறை மருத்துவ அறையில் வைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்களை அமைச்சர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில், திண்டுக்கல் தொகுதி எம்.பி. உதயகுமார், வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம், மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, நலப்பணிகள் இணை இயக்குனர் மாலதிபிரகாஷ், முன்னாள் மேயர் மருதராஜ் மற்றும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.