சென்னை,
சென்னை, மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் கட்டப்பணிகள் நிறைவடைந்து மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் அடுத்து உள்ள விம்கோ நகர் வரை 9 கிலோ மீட்டர் தொலைவிற்கு நீட்டிக்கும் பணிகள் ரூ.3 ஆயிரத்து 770 கோடி செலவில் நடந்து வருகிறது.
முதல் கட்ட நீட்டிப்பு பணிகளில் சுரங்கப்பாதையில் சர்.தியாகராயர் கல்லூரி மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் கொருக்குப்பேட்டை நிலையம் ஆகிய இரண்டு ரெயில் நிலையங்கள் மற்றும் உயர்மட்டப்பாதையில் தண்டையார்பேட்டை, சுங்கச்சாவடி, தாங்கல், கவுரி ஆசிரமம், திருவொற்றியூர், விம்கோநகர் ஆகிய 6 ரெயில் நிலையங்களும் அமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. இந்தநிலையில் சென்னை, மெட்ரோ ரெயில் நிறுவன நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் உள்ளிட்ட மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை நேற்று ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது இந்த 2 ரெயில் நிலையத்துக்கும் இடையே தண்டவாளம் அமைக்கும் பணி நிறைவடைந்து உள்ளன. தொடர்ந்து சுரங்கப்பாதைக்கு செல்லும் வழிகள் முறையாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப்பாதையில் சிக்னல் அமைப்பதற்கான பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்து உள்ளன.
கொருக்குப்பேட்டை ரெயில் நிலைய பணிகளுக்கு இடையே, டோல்கேட் பகுதியில் இருந்து உயர்மட்ட பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் டோல்கேட்டில் இருந்து கவுரி ஆசிரமம் வரை உள்ள பணிகள் நிறைவடையும் நிலையை எட்டி உள்ளன.
குறிப்பாக ஒரு தூணுக்கும் மற்றொரு தூணுக்கும் இடையே முன்னேறி செல்லும் நவீன எந்திரம் மூலம் இந்த பாதை அமைக்கப்படுகிறது.
அதேபோன்று முதல் கட்டத்தில் உயர்மட்ட பாதையின் அருகில் சாலையின் ஓரத்தில் ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் அதிக அளவில் நிலங்கள் தேவைப்பட்டன. இதற்காக கூடுதல் நிதியும் செலவிடப்பட்டது. ஆனால் விரிவாக்கப்பணியில் உயர்மட்ட பாதையின் கீழே ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்திற்கான செலவு முற்றிலும் குறைக்கப்பட்டு உள்ளது.