தேசிய செய்திகள்

ஒடிசா முதல்–மந்திரி மீது ஷூ வீச்சு

ஒடிசா முதல்–மந்திரி மீது வாலிபர் ஒருவர் திடீரென தனது 2 ஷூக்களையும் வீசினார்.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலத்தில் பிஜப்பூர் சட்டசபை தொகுதிக்கு 24ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதையொட்டி, அங்கு போட்டியிடும் பிஜு ஜனதாதளம் வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சி தலைவரும், முதல்மந்திரியுமான நவீன் பட்நாயக், நேற்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது, மேடைக்கு மிக நெருங்கிய தூரத்தில் அமர்ந்திருந்த ஒரு வாலிபர், திடீரென தனது 2 ஷூக்களையும் நவீன் பட்நாயக்கை நோக்கி வீசினார். நவீன் பட்நாயக்கின் மெய்க்காப்பாளர் குறுக்கே புகுந்து ஒரு ஷூவை கேட்ச் பிடித்தார். மற்றொன்று, மேடையில் விழுந்தது.

இதையடுத்து, பாதுகாவலர்கள், நவீன் பட்நாயக்கை பத்திரமாக காருக்கு அழைத்து சென்றனர். ஷூ வீசிய வாலிபரை பிஜு ஜனதாதளத்தினர் அடித்து உதைத்தனர். அவர் தீவிர பா.ஜனதா உறுப்பினர் என்று பிஜு ஜனதாதளம் குற்றம்சாட்ட, பா.ஜனதா அதை மறுத்துள்ளது. கடந்த ஜனவரி 31ந் தேதி, நவீன் பட்நாயக் மீது ஒரு பெண் 3 முட்டைகளை வீசிய சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.