அவுரங்காபாத்,
நாட்டில் கடந்த 2020ம் ஆண்டு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் மக்கள் அவதிப்பட்டனர். இதனால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பின்னர் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. சமீப நாட்களாக தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இவற்றில் மராட்டியம் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இதனை முன்னிட்டு தடுப்பு நடவடிக்கைகளை முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தீவிரப்படுத்தி வருகிறார். இந்நிலையில், மராட்டியத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 57,755 ஆக அதிகரித்து உள்ளது. 5,569 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மராட்டியத்தின் அவுரங்காபாத்தில் அதிகரித்து வரும் தொற்றால் வார விடுமுறை நாட்களில் முழு அடைப்பு அமல்படுத்துவது என அரசு முடிவு செய்தது. இதன்படி மராட்டியத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் முழு அடைப்பு இன்று அமலுக்கு வந்துள்ளது.
இதனை முன்னிட்டு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பொதுமக்களும் வீடுகளை விட்டு வெளியே வராமல் கூடியவரை தவிர்த்து வருகின்றனர். வாகன போக்குவரத்தும் முடங்கி காணப்படுகிறது.