புதுடெல்லி,
கேரள பெண் ஹாதியாவின் லவ் ஜிகாத் வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, தமிழ்நாட்டில் உள்ள சேலத்துக்கு சென்று அவர் தனது படிப்பை தொடரலாம் என தீர்ப்பளித்தது.
ஹாதியாவை மீண்டும் கல்லூரியில் சேர்த்து கொண்டு அவர் தங்குவதற்கு விடுதி வசதிகளை வழங்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் ஹாதியா, சேலத்தில் தனது ஹோமியோபதி படிப்பை தொடர இருக்கிறார். இந்த வழக்கின் முடிவில், சேலம் ஹோமியோபதி கல்லூரி டீனை ஹாதியாவின் பாதுகாப்பாளராக நியமித்தது உச்ச நீதிமன்றம். மேலும் எதுவும் சிக்கல் தொடர்ந்தால் தங்களை அணுகலாம் என்றும் தெரிவித்தது.
இந்நிலையில் கலப்பு திருமணம் பற்றி ஹாதியாவின் தந்தை கே.எம். அசோகனிடம் கேட்டதற்கு பதிலளித்த அவர், ஒரு மதம் மற்றும் ஒரு கடவுள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால், எனது குடும்பத்தில் தீவிரவாதி ஒருவரை வைத்திருக்க முடியாது என கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் கூறும்பொழுது, சிரியா நாடு பற்றி ஹாதியாவுக்கு எதுவும் தெரியாது. ஆனால் இஸ்லாம் மதத்திற்கு மாறிய பின்பு அங்கு செல்ல அவர் விரும்புகிறார் என்றும் கூறியுள்ளார்.