முத்தலாக் தடை மசேதாவை மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். மக்களவையில் முத்தலாக் மசோதாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்த நிலையில் மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க.வின் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் மற்றும் நவநீதகிருஷ்ணன் ஆய்வுக்குழுவுக்கு அனுப்ப வலியுறுத்தினர். மாநிலங்களவையில் அ.தி.மு.க.வுக்கு 11 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில் முத்தலாக் தடை மசோதா விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
முத்தலாக் மசேதாவிற்கு எதிராக பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம், ஆகிய கட்சிகளும் வெளிநடப்பு செய்தன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டபடி இருந்தன.
தெலுங்குதேசம், தெலங்கானா ராஷ்டீரிய சமிதி, ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அவைக்கு வரவில்லை. இதேபோன்று தேசியவாத காங்கிரஸ் உறுப்பினரும் அவைக்கு வரவில்லை.
இதனிடையே மாநிலங்களவையில் முத்தலாக் சட்ட திருத்த மசேதா மீதான வாக்கெடுப்பு நிறைவு பெற்றது. இநத மசோதாவுக்கு 99 பேர் ஆதரவும், 84 பேர் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதனை அடுத்து முத்தலாக் தடை மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேறியது.
இதுபற்றி கனிமொழி எம்.பி. டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், முத்தலாக் தடை மசோதா வெற்றி பெற வசதியாக அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது என தெரிவித்துள்ளார்.