சென்னை,
இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி திட்டம் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் 1-ந் தேதி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அதன் பின்னர் சரியாக 28 நாள்கள் இடைவெளியில் இரண்டாவது கட்ட தடுப்பூசியை செலுத்திக் கொள்வேன் என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு இன்று செலுத்திக்கொண்டார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், இன்று டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்திக் கொண்டேன். அதுபோலவே, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதிவாய்ந்த மக்கள் அனைவரும் தாங்களாகவே முன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். நாட்டின் சில பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு அனைவரும் தொடர்ந்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும். என்று பதிவிட்டுள்ளார்.