தேசிய செய்திகள்

மேற்கு வங்க மதக்கலவரம் குறித்து கவர்னர் திரிபாதி ராஜ்நாத்திடம் தகவல் தெரிவித்தார்

வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட மதகலவரம் குறித்தான தகவல்களை அம்மாநில கவர்னர் திரிபாதி ராஜ்நாத்திடம் தெரிவித்து உள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் படுரியா என்ற பகுதியில் நேற்று முன்தினம் மாலை திடீரென இரு மதத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

முகநூலில் ஹோலி தொடர்பான பக்கத்தில் ஆட்சேபனைக்குரிய கருத்து ஒன்று வெளியானதால் இந்த கலவரம் ஏற்பட்டதாக தெரிகிறது. ஆங்காங்கே தீவைப்பு சம்பவங்களும், மோதல்களும் ஏற்பட்டன. கலவரத்தை கட்டுப்படுத்த மாநில போலீசாருக்கு உதவியாக மத்தியில் இருந்து 3 கம்பெனி துணை ராணுவம் (300 வீரர்கள்) மேற்குவங்காளத்துக்கு அனுப்பப்பட்டது. அம்மாநிலத்தின் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் கைலாஷ் விஜய்வர்கியா, மேற்குவங்காள போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டனர்.

எனவே இதில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் பேசி உள்ள அம்மாநில கவர்னர் திரிபாதி, மத கலவரம் குறித்தான தகவல்களை அவரிடம் கூறிஉள்ளார். கவர்னர் திரிபாதி, ராஜ்நாத் சிங்கிடம் தொலைபேசியில் பேசினார், வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் நடந்த மோதல்கள் தொடர்பான தகவல்களை தெரிவித்தார். இப்போது அங்கு நிலவும் நிலை குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர், என கவர்னர் மாளிகை தரப்பு தகவல்கள் தெரிவிப்பதாக பிடிஐ செய்தி வெளியிட்டு உள்ளது.

மேற்குவங்க மாநில கவர்னர் கேசரி நாத் திரிபாதி என்னை தெலைபேசியில் அழைத்து மிரட்டினார். பேச்சால் எனக்கு அவமானம் ஏற்பட்டது மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளநிலையில் இந்த தொலைபேசி உரையாடல் நடந்து உள்ளது.