புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு சமூக உதவியை வழங்குவதற்காக கோவிட்-19 சமூக பாதுகாப்பு பதிலளிப்பு திட்டத்தின்கீழ் உலக வங்கி, இந்தியாவுக்கு 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ.7,500 கோடி) நிதி உதவி அளிக்கிறது. இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு விட்டது.
இதன்மூலம் இந்தியாவுக்கு உலக வங்கி வழங்கும் கொரோனா வைரஸ் தடுப்பு ஆதரவு நிதி 2 பில்லியன் டாலர் ஆக (ரூ.15 ஆயிரம் கோடி) அதிகரித்துள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் 1 பில்லியன் டாலர் உதவியை உலக வங்கி அறிவித்தது நினைவுகூரத்தக்கது.