சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் இதுவரை மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படாத மாவட்டங்களில் 3 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் மருத்துவக் கல்வியை பரவலாக்குவதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகும்.
தமிழ்நாட்டில் புதிய அமைக்கப்படவுள்ள மருத்துவக் கல்லூரிகள் ஒவ்வொன்றிலும் 150 எம்.பி.பி.எஸ். இடங்கள் உருவாக்கப்படவுள்ளன. இதையும் சேர்த்தால் தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் 4,950 இடங்கள் இருக்கும். இதன்மூலம் நாட்டில் அதிக மருத்துவ இடங்கள் கொண்ட மாநிலமாக தமிழகம் உருவெடுக்கும்.
நாகை மாவட்டத்திற்கு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி நாகப்பட்டினத்தில் அமைக்கப்பட்டால் இந்த நோக்கம் நிறைவேறாது. இந்த மருத்துவக் கல்லூரியை நாகை மாவட்டத்தின் முக்கிய நகரமான மயிலாடுதுறையில் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு 60 கிலோ மீட்டர் தொலைவு என்பதால் நோயாளிகளை அங்கு கொண்டு செல்வதில் பல சிரமங்கள் ஏற்படும். எனவே, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கான அரசு மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைப்பதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.