தமிழக செய்திகள்

அதிகரிக்கும் வெப்பம் - உடல் சூட்டை தணிக்கும் பதநீர்...!

தென் மாவட்டங்களில் பதநீர் விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

நெல்லை,

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பனைமரங்கள் அதிக அளவில் காணப்படுகிறது. கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் பனைமரங்களில் இருந்து பதநீர் இறக்கம், கருப்பட்டி தயாரிப்பு மற்றும் பனை சார்ந்த தொழில்களுக்கு தற்போது சூடுபிடித்துள்ளது. .

தென்மாவட்டங்களில் பனைமரங்களில் இருந்து இறக்கப்படும் பதநீரை விற்பனை செய்யும் தொழிலில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் வெப்பத்தை தணிக்க பதநீர் குடிக்க இப்பகுதிக்கு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் பனைத் தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இத்தகைய பதநீரில் மருத்துவ குணம் நிறைந்து காணப்படுவதால் பதநீர் குடிப்பதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த பதநீரை பழைய கஞ்சியுடன் சேர்த்துப் புளிக்க வைத்து ஆறாத புண்கள், கொப்புளங்கள் மீது தடவிவந்தால் புண்கள் குணமடைகின்றது.

மேலும் அதில் சுண்ணாம்பு சேர்க்கப்படுவதால் உடம்புக்குத் தேவையான கால்சியம் கிடைக்கிறது. எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும் ஆற்றல் பதநீருக்கு உண்டு. உடல் மெலிந்தவர்களுக்குச் சிறந்த ஊக்கம் தரும் மருந்தாகவும் பதநீர் பயண்படுகின்றது.