சேலம்,
பெட்ரோல்-டீசல் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். அதே போன்று ஆட்டோ, லாரி உள்ளிட்ட வாகனங்களின் உரிமையாளர்களும் கடும் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில பொருளாளர் தன்ராஜ் கூறியதாவது:-
பெட்ரோல்-டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த ஒரு ஆண்டாக லாரி தொழில் பாதிப்பு அடைந்து உள்ளது. ஏராளமான லாரிகள் அவரவர் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
தமிழகம் முழுவதும் சுமார் 35 சதவீதம் லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மத்திய அரசு லாரி உரிமையாளர்களை கண்டுகொள்ளவில்லை. இதனால் லாரி தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அமைப்பானது, டீசல் விலையை குறைக்க வேண்டும். பெட்ரோல்-டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும். அப்படி கொண்டு வராவிட்டால் நாடு முழுவதும் விரைவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து உள்ளது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது குறித்தும், போராட்டத்தில் பங்கேற்பது குறித்தும் முடிவு எடுக்க இன்று (வியாழக்கிழமை) தென்மண்டல லாரி உரிமையாளர்கள் சம்மேள ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் டீசல் விலை உயர்வால் ஏற்பட்டு உள்ள தொழில் பாதிப்புகள் குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளோம். அதன் பிறகு முடிவை அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.