ஜெருசலேம்,
இந்தியா-இஸ்ரேல் இடையிலான தூதரக உறவுகள் தொடங்கப்பட்டதன் 25-ம் ஆண்டு நினைவாக பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். தனி விமானம் மூலம் இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் சென்று இறங்கிய மோடியை, அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ விமான நிலையத்துக்கே வந்து சிறப்பாக வரவேற்றார். இஸ்ரேலில் 3 நாள் தங்கியிருக்கும் பிரதமர் மோடி அங்கே பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி நினைவு பரிசுகளை அளித்துள்ளார். 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் யூதர்கள் வாழ்ந்ததற்கு சான்றாக பொறிக்கப்பட்டுள்ள வரலாற்று நினைவு தாமிர தகடுகளை மோடி வழங்கியுள்ளார். கேரளாவில் யூதர்கள் வாழ்ந்தது மற்றும் இந்தியாவில் யூதர்கள் மேற்கொண்ட வர்த்தகம் குறித்த குறிப்புகள் அந்த தகடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
இன்று காலையில் இஸ்ரேல் அதிபர் ரியுவென் ரிவ்லினை சந்தித்து பேசினார். ஜெருசலேமில் உள்ள ரியுவென் ரிவ்லினின் வீட்டுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, அதிபர் சிறப்பான வரவேற்பு அளித்தார் இந்த நிகழ்வின் போது, அவர்களது உபசரித்ததற்கும், இருநாட்டு நட்புறவுகளுக்கும் பிரதமர் மோடி, ரியுவென் ரிவ்லினிடம் நன்றி தெரிவித்தார். பின்னர் இரு நாட்டு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.