ராஞ்சி,
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தோனி, இந்தியா மட்டும் அல்லாது உலக முழுவதும் புகழ்பெற்றவர். தோனி, விளையாடும் போட்டிகளின் போது பெரும்பாலான நேரங்களில் தனது மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஷிவா ஆகியோரை உடன் அழைத்துச்செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தோனி தனது மனைவி மற்றும் செல்ல மகளுடன் வெளியில் செல்லும் புகைப்படங்களும் இணையதளத்தில் வைரல் ஹிட் அடிப்பது வாடிக்கையாகும்.
இந்த நிலையில், தோனியின் மனைவியான சாக்ஷி, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி, துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ளார். பிஸ்டல் அல்லது .32 ரிவால்வர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
டோனி கிரிக்கெட் விளையாட சென்றுவிடுவதால், தான் பெரும்பாலான நேரங்களில் வீட்டில் தனியாக இருப்பதாகவும், மேலும் தனிப்பட்ட வேலைக்காரணமாக வெளியில் தனியாக செல்ல இருப்பதாலும், உயிருக்கு ஆபத்து உள்ளது. இதனால் துப்பாக்கி வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று சாக்ஷி விண்ணப்பத்தில் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. நட்சத்திர வீரரான தோனி, கடந்த 2010-ம் ஆண்டு முதல், தனது பாதுகாப்பிற்காக அனுமதியுடன் துப்பாக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.